தி.மு.க., என்றாலே ஊழல் மிகுந்த கட்சி பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேச்சு
தி.மு.க., என்றாலே ஊழல் மிகுந்த கட்சி பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேச்சு
ADDED : ஏப் 17, 2024 12:42 AM

பரமக்குடி:''-ஜூன் 4 தேர்தல் முடிவுகளுக்கு பின், தி.மு.க.,வினர் ஜெயிலில் அல்லது பெயிலில் இருப்பர்,'' என, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த ரோடு ேஷாவில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசினார்.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், பன்னீர்செல்வம் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா நேற்று காலை பரமக்குடியில் ரோடு ேஷாவில் பங்கேற்றார்.
அவருடன் பன்னீர்செல்வம், எம்.பி.,க்கள் தர்மர், ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பிரசார வாகனத்தில் வந்தனர். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர் துாவி வரவேற்றனர். பிரசாரம் பஸ் ஸ்டாண்ட் வழியாக, நேதாஜி ரோட்டிலிருந்து காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது.
சிறப்பு கவனம்
அங்கு நட்டா பேசியதாவது:
உங்களிடம் காணப்படும் உற்சாகம், எழுச்சியை பார்க்கும் போது, பன்னீர்செல்வத்தை டில்லிக்கு எம்.பி.,யாக அனுப்ப தயாராகி விட்டீர்கள் என்பது தெரிகிறது.
தமிழகத்திற்காக போராடுபவர் பன்னீர்செல்வம். தற்போது நடக்கும் தேர்தல், 2047ல் வளர்ச்சியடைந்த பாரதமாக இருக்க வேண்டும் என்பதற்கானது. நம் கூட்டணியில், 400 எம்.பி.,க்கள் வெற்றி பெற்று அரசு அமைய வேண்டும் என்பதற்கான தேர்தல்.
தமிழகத்திற்கு வழக்கமாக வழங்கும் தொகையை விட, 4 மடங்கு அதிகமாக மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தி.மு.க., என்றாலே ஊழல் மிகுந்த கட்சி. தி.மு.க.,வை சேர்ந்த 13 பேர், 1 லட்சம் கோடி சொத்து சேர்த்துள்ளனர்.
தி.மு.க., என்பதன் டி.எம்.கே., என்ற எழுத்துகளுக்கு தனி அர்த்தம் உள்ளது. டி - என்றால் வாரிசு அரசியல், எம் - பண மோசடி, கே - கட்டப்பஞ்சாயத்து செய்வது. இது தான் தி.மு.க.,
ஜூன் 4ல் வரும் தேர்தல் முடிவுகளுக்கு பின் தி.மு.க.,வினர் ஜெயிலில் இருப்பர் அல்லது பெயிலில் இருப்பர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பன்னீர்செல்வம் பேசியதாவது:
பத்து ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி தந்துள்ளார் மோடி. பல்வேறு மொழிகள், கலாசாரம் உடைய நாட்டை ஒரு குடைக்குள் கொண்டு வந்து சிறப்பான ஆட்சி தந்துள்ளார். 200 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில், உலகில் தலை சிறந்த நிர்வாகி பிரதமர் மோடி என, பிரகடனப்படுத்திஉள்ளனர்.
மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வருவதற்கான தேர்தல்.
உங்களில் ஒருவனாக லோக்சபா தேர்தலில் என்னை தேர்வு செய்தால், இந்த தொகுதியில் தங்கி குடிநீர் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
11 மருத்துவக் கல்லுாரி
இதன்பின், தென்காசி தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்து, நட்டா பேசியதாவது:
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், அயோத்தியில் ராமஜென்ம பூமியை கொண்டு வந்தார். காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை நீக்கினார். உலகளவில் பொருளாதாரத்தில் இந்தியா 11வது இடத்தில் இருந்தது. அதை 5வது இடத்திற்கு முன்னேற்றினார்.
தமிழகத்துக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர மோடி பிரதமராக வேண்டும். கிராம மக்களுக்கான அரசு என்றால் அது பிரதமர் மோடியின் அரசு தான். தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லுாரிகளை கொண்டு வந்தது மத்திய பா.ஜ., அரசு தான்.
இவ்வாறு அவர் பேசினார்.

