'சிறுவாணி குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை தி.மு.க., தடுக்க வேண்டும்'
'சிறுவாணி குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை தி.மு.க., தடுக்க வேண்டும்'
ADDED : மார் 25, 2024 06:20 AM

சென்னை: 'இண்டியா கூட்டணி நலனுக்காக, தமிழக மக்கள் நலனை பலி கொடுக்காமல் கேரளா அரசு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டாமல் தடுக்க, தி.மு.க., அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர்அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லுார் அணை திட்டங்கள். சிறுவாணி தண்ணீர், கோவையின் குடிநீர் தேவைக்காகவும், பாசன தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், கோடை காலத்தில், இந்த அணைகளில் நீர்மட்டம் குறைவதும், அதனால் மக்கள் அவதிப்படுவதும் வாடிக்கையாகி இருக்கிறது.
இந்தாண்டும், சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், கோவை பகுதிகளில் கடும் குடிநீர்பற்றாக்குறை நிலவி இருக்கிறது.
தொலைநோக்கு சிந்தனை இல்லாத தி.மு.க., அரசு, குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. இதனால், இந்தாண்டும் குடிநீர் பஞ்சம் தொடர்கிறது.
சிறுவாணி அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி. நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம், 18.10 அடி மட்டுமே உள்ளது.
பில்லுார் அணையின் நீர்த்தேக்க உயரம், 100 அடி. நேற்றைய நிலவரப்படி, 62.50 அடி உயர நீர் மட்டுமே உள்ளது. பில்லுார் 1, 2, 3 திட்டங்களுக்கு தினமும், 40 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலம், முத்திக்குளம் என்ற பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. அங்கிருந்து, பவானி ஆறாக, பில்லுார் அணைக்கு வருகிறது. இங்கிருந்து தான், அத்திக்கடவு, பவானிசாகர் அணை வரை தண்ணீர் செல்கிறது.
கடந்த, 2023 ஏப்ரலில், தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான, கேரளா மாநில கம்யூனிஸ்ட் கட்சி, அம்மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே, நெல்லிப்பதி என்ற இடத்தில் விதிகளை மீறி, சிறுவாணி அணை ஆற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டிய செய்தி வெளியானது.
அதில், 90 சதவீதம் தடுப்பணை பணிகள் முடிவடைந்ததும், மேலும் இரு தடுப்பணைகள் கட்ட, கேரள கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரள கம்யூனிஸ்ட் அரசு கட்டி வரும் தடுப்பணைகளால், பில்லுார் அணைக்கு வரும் நீர் குறையும் என்றும், அதனால், கோவையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும், பாசன நீர் வரத்து குறையும் என்றும் கடந்த ஆண்டே மக்களும், விவசாயிகளும் அச்சம் தெரிவித்தனர்.
தங்கள், 'இண்டியா' கூட்டணி நலனுக்காக இதுகுறித்து, கேரள அரசிடம் எதுவும் பேசாமல், தடுப்பணைகள் கட்டும் முடிவை கைவிட வலியுறுத்தாமல், கோவை மக்கள் நலனுக்கு விரோதமாக தி.மு.க., அரசு செயல்பட்டது.
இதன் விளைவு, இந்தாண்டு கோடை காலம் வரும் முன்பே, கோவையில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. உடனே, தி.மு.க., அரசு கோவையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரள கம்யூனிஸ்ட் அரசு கட்டியுள்ள தடுப்பணைகளின் தற்போதைய நிலை என்ன என்பதையும், தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
'இண்டியா' கூட்டணி நலனுக்காக, தமிழக மக்கள்நலனை பலி கொடுக்காமல், கேரளா அரசு, மேலும் புதிய தடுப்பணைகள் கட்டாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

