தர்மபுரி தொகுதி தி.மு.க., வெற்றிக்கு வி.சி., தான் காரணம்: திருமாவளவன்
தர்மபுரி தொகுதி தி.மு.க., வெற்றிக்கு வி.சி., தான் காரணம்: திருமாவளவன்
ADDED : ஜூன் 10, 2024 12:47 AM
விக்கிரவாண்டி: ''மக்களையும், நாட்டையும் காப்பாற்ற இண்டியா கூட்டணி மேலும் வலுப்பெற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.
பெரும்பான்மை இல்லை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி காலனியில் நேற்று நடந்த முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற, அவர் கூறியதாவது:
பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கிறது. இந்த நெருக்கடி பா.ஜ.,விற்கு இந்திய மக்களால் வழங்கப்பட்டுள்ளது. மிகச் சிறப்பான ஆட்சியை, 10 ஆண்டு காலம் வழங்கியிருந்தால், இப்படிப்பட்ட நெருக்கடியை சந்தித்திருக்க வாய்ப்பில்லை.
அதே நேரத்தில், 'இண்டியா' கூட்டணிக்கு கணிசமான வெற்றியை வழங்கினாலும், ஆட்சி அமைக்கக் கூடிய வெற்றியை வழங்கவில்லை. இது, இண்டியா கூட்டணி தலைவர்களுக்கு இந்திய மக்கள் வழங்கியிருக்கும் எச்சரிக்கை மற்றும் அறிவுரையாக நான் பார்க்கிறேன்.
பக்குவம் பெற வேண்டும்
இண்டியா கூட்டணி இன்னும் வலுப்பெற வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும். 28 கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில், நிலையான ஆட்சி அமைக்கக் கூடிய நல்லிணக்கம் பெருக வேண்டும்.
ஒருவேளை பா.ஜ., தலைமையிலான அரசு, நிலையாக இல்லாமல் தடுமாறி கவிழ்ந்தால், அந்த நேரத்தில் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதற்கு இண்டியா கூட்டணி தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டணியில் ஒரு அங்கம் என்ற முறையில், இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தேர்தலில் முன்னணி வகித்த பா.ம.க., அரூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் போது, பா.ம.க.,வை பின்னுக்குத் தள்ளி தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்தது. இதற்கு வி.சி., ஓட்டுகள் உதவின.
அதேபோன்று வரவிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கும் வி.சி., ஓட்டுகள் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

