'எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்' கவர்னர் - முதல்வர் மீண்டும் மோதல்
'எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்' கவர்னர் - முதல்வர் மீண்டும் மோதல்
ADDED : பிப் 15, 2025 02:28 AM
சென்னை:சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு விவகாரத்தில், கவர்னருக்கும் முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் துவங்கி உள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்ற அனுப்பப்பட்டுள்ள முக்கிய மசோதாக்களுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் ஒரு ஆங்கில நாளிதழில், கவர்னர் ரவி குறித்த தலையங்கம் வெளியானது.
அதை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'கவர்னர் தன்னிச்சையாக செயல்பட்டு, சட்டசபையின் மாண்பையும், மதிப்பையும் குறைக்கிறார். பதவியில் தொடர அவருக்கு தார்மீக அதிகாரம் இல்லை' என கூறியிருந்தார்.
அதற்கு கவர்னர் மாளிகை அளித்த பதிலில், 'அரசியலமைப்பில் உயரிய பதவியை வகிக்கும் ஒரு முதல்வர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக அமையக்கூடிய விஷயத்தில் தன் முழுமையான நிர்வாக தோல்வியை மறைக்க பயன்படுத்தி இருப்பது பரிதாபத்துக்குரியது' என, கூறப்பட்டுள்ளது.
அதற்கு பதில் தரும் வகையில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், வேறு பதவியை பெற நினைக்கும் கவர்னர், டில்லியில் உள்ள உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க, தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அரசியலமைப்பு சட்டத்தால் வழங்கிய பதவியை, அரசியல்மயமாக்கி கொண்டுள்ளார்.
கவர்னர் வரும் முன்பே, தமிழகம் ஒரு செழிப்பான நிலையை அடைந்துள்ளது.
தமிழகத்திற்கு எது சிறந்தது என, எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக, அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களுக்கு மதிப்பளியுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

