ADDED : ஏப் 21, 2024 12:39 AM

உடுமலை:தமிழகத்தில் முதல் முறையாக வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
தமிழகத்தில், மாநில விலங்கான வரையாடுகள், அரிய வகை வனவிலங்குகள் பட்டியலில் அட்டவணை-1ல் இடம் பெற்றுள்ளது. அழிந்து வரும் வரையாடுகளை காக்கும் வகையில், தமிழக அரசு, வரையாடுகள் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கடந்தாண்டு, அக்., 23ல் திட்டம் துவக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் முதன் முறையாக, ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணி, வரும், 29 முதல் மே 1ம் தேதி வரை நடக்கிறது.
இந்த கணக்கெடுப்பு பணி, நீலகிரி, முக்குருத்தி தேசிய பூங்கா முதல் கன்னியாகுமரி வனஉயிரின சரணாலயம் வரையிலான, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள வரையாடுகளின், 140 வாழ்விடங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
இதில், முக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் வால்பாறை வனச்சரகத்தில் புல்மலை சுற்றுகளை ஒட்டிய கேரள வனப்பகுதிகளிலும், வரையாடுகள் அதிகளவு காணப்படுவதால், இப்பகுதியில் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது.

