கம்யூ., மேயர் காருக்கு வழி விடாத அரசு பஸ் டிரைவர் மீது போதை வழக்கு: மருத்துவ பரிசோதனை முடிவால் மேயருக்கு சிக்கல்
கம்யூ., மேயர் காருக்கு வழி விடாத அரசு பஸ் டிரைவர் மீது போதை வழக்கு: மருத்துவ பரிசோதனை முடிவால் மேயருக்கு சிக்கல்
ADDED : ஏப் 29, 2024 11:39 PM

நாகர்கோவில்: திருவனந்தபுரம் மேயர் பயணம் செய்த காருக்கு வழி விடாத டிரைவர் மீது போதை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரிய வந்ததால் மேயர் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
திருவனந்தபுரம் மேயர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன். கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ. ஏப்., 27 இரவு 10:00 மணியளவில் மேயரும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்த சொந்த காருக்கு முன்னால் சென்ற அரசு பஸ் வழி விடவில்லை.
இதை தொடர்ந்து திருவனந்தபுரம் பாளையம் அருகே பஸ்சை ஓவர்டேக் செய்து வழிமறித்து காரை நிறுத்தினர்.
பஸ் டிரைவர் யதுவிடம் மேயர் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். யது மீது போதை பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் போதைப் பொருள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது .
போதை பொருள் பயன்படுத்திவிட்டு அதன் கவரை தங்கள் வாகனத்தின் மீது வீசியதாக மேயர் கூறியிருந்தார்.
ஆனால் மருத்துவ பரிசோதனையில் போதை பயன்படுத்தவில்லை என முடிவு வந்துள்ளதால் மேயர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

