ADDED : செப் 17, 2024 05:46 AM
சென்னை : முருங்கை கீரை மற்றும் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலையின்றி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
திண்டுக்கல், துாத்துக்குடி, தேனி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், முருங்கை சாகுபடி நடந்து வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் முருங்கை கீரை மற்றும் முருங்கைக்காய், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கோயம்பேடு, கோவை - நாச்சிப்பாளையம் உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படுகிறது, பின், அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களின் தேவைக்கு அனுப்பப்படும்.
தற்போது, தமிழகத்தில் முருங்கைக் காய் மற்றும் முருங்கை கீரை உற்பத்தி அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும், 25க்கும் மேற்பட்ட லாரிகளில் வரத்து உள்ளது. அதனால், முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிலோ முருங்கைக்காய், 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வாகன வாடகை கட்டுப்படியாகாததால், முருங்கைக்காய் கொள்முதலை கமிஷன் ஏஜன்டுகள், மொத்த வியாபாரிகள் குறைத்துள்ளனர். முருங்கை கீரை மற்றும் முருங்கைக் காயை மதிப்பு கூட்டும் தொழிற்நுட்ப பணி, கரூரில் தாமதமாகி வருகிறது. இதனால், உற்பத்தியாகும் முருங்கைக்காய் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.