இரவில் குவியும் புகார்களால் தினமும் திணறும் மின்னகம்
இரவில் குவியும் புகார்களால் தினமும் திணறும் மின்னகம்
ADDED : ஜூலை 11, 2024 01:44 AM
சென்னை:மின்னகம் சேவை மையத்தில் இரவு 9:00 மணிக்கு மேல் புகார் அளிக்க முடியாமல் பலரும் சிரமப்படுகின்றனர். எனவே, விரைந்து புகார் பெற, கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுஉள்ளது.
தமிழக மின் வாரியம் சார்பில், மின் தடை குறித்து புகார் தெரிவிக்க, கணினி மையம், பொறியாளர்கள் மொபைல் போன் எண், அலுவலக தொலைபேசி எண் உட்பட, 110 எண்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த எண்களில் புகார் அளித்தால் பதிவு செய்யும் வசதி இல்லாததால், மேல் நடவடிக்கையை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.
கூடுதல் கவனம்
எனவே, 2021 ஜூனில், சென்னை மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின்னகம் நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டது.
அங்கு, 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணில், 24 மணி நேரமும் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவிக்கும் வசதி துவக்கப்பட்டது.
ஒரு, 'ஷிப்டு'க்கு 60 பேர் என, மூன்று ஷிப்டுகளில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் புகாரை பெற்று கணினியில் பதிவு செய்து, மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வாயிலாக, சம்பந்தப்பட்ட அலுவலக உதவி பொறியாளர்களிடம் தெரிவிப்பர்.
இது தவிர, புகார்தாரரின் மொபைல் போன் எண்ணுக்கும், புகார் எண், எஸ்.எம்.எஸ்., தகவலாக அனுப்பப்பட்டது. அந்த எண் வாயிலாக, நடவடிக்கை விபரத்தை அதிகாரிகள் அறிய முடியும்.
இதனால், மின்னகத்தில் அளிக்கப்படும் புகார் மீது, பொறியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
நடவடிக்கை இல்லை
மின்னகத்தில் தினமும் சராசரியாக, 2,500 - 3,000 புகார்கள் பெறப்படுவதில், பாதிக்கும் மேல் இரவில் தான் பதிவாகின்றன. அதுவும், சென்னை மற்றும் புறநகரில் இருந்து தான் பதிவாகின்றன. இதற்கு மின் சாதனங்களின் பழுதால் ஏற்படும் மின் தடையே காரணம்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'இரவில் மின் தடை ஏற்படும்போது, மின்னகத்தில் புகார் அளிக்க முயன்றால், இணைப்பு கிடைப்பதில்லை. இதனால், புகார் அளிக்க சிரமம் ஏற்படுகிறது.
'அப்படியே புகார் அளித்தாலும், அதுபற்றிய தகவல் மொபைல் போனுக்கு வருகிறதே தவிர, பிரச்னையை தீர்க்க யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.
'உள்ளூர் அதிகாரிகளை அழைத்தாலும், அவர்கள் போனை எடுப்பதே இல்லை. இந்த போராட்டம் முடிவதற்குள் பொழுது விடிந்து விடுகிறது' என்றனர்.
3.30 கோடி மின் நுகர்வோர்
இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறுகையில், 'சென்னையில் 40 லட்சம் உள்பட, தமிழகம் முழுதும் 3.30 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர்.
'பகலில் மின்னகத்தில் வெகு குறைவாகவும், இரவில் அதிக புகார்களும் வருகின்றன; அதற்கு ஏற்ப, இரவில் கூடுதல் நபர்களையும், பகலில் குறைந்த நபர்களையும் நியமித்து புகார் பெறலாம். இதற்காக கூடுதல் செலவு ஏற்படாது' என்றனர்.

