ADDED : மே 24, 2024 04:13 AM

சென்னை : தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியது.
தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை குறித்த விபரங்களை, துல்லியமாக திரட்ட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. யானைகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, இந்த புள்ளி விபரங்கள் அவசியம்.
உணவு, தண்ணீர் போன்ற தேவைகளுக்காக, யானைகள் நீண்ட தொலைவுக்கு பயணிக்கும் என்பதால், ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் இதன் எண்ணிக்கையை முடிவு செய்வது சிரமம். இதை கருத்தில் வைத்து, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநில வனத்துறையினர் சேர்ந்து, ஒருங்கிணைந்த முறையில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 2023ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2,961 யானைகள் இருப்பது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு, தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் நேற்று துவங்கியது. மே, 25 வரை இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும்.
தமிழக எல்லையில், 26 வன கோட்டங்களில், 697 பிரிவுகளில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில், 1,836 வனத்துறை கள பணியாளர்கள், 342 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.