யானைகள் வழித்தட பாதுகாப்பு திட்டம்; பொதுமக்கள் கருத்து கூற அழைப்பு
யானைகள் வழித்தட பாதுகாப்பு திட்டம்; பொதுமக்கள் கருத்து கூற அழைப்பு
ADDED : ஏப் 30, 2024 05:58 AM
சென்னை : 'தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களை பாதுகாப்பதற்கான திட்டத்தின் வரைவு அறிக்கை தொடர்பாக, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்' என, வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், யானைகள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன. கடந்த, 2023 நிலவரப்படி, 2,961 யானைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய வளர்ச்சி மற்றும் விவசாய பணிகள் குறுக்கீடு காரணமாக, யானைகளின் வழித்தட தொடர்ச்சி, பல இடங்களில் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், யானைகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம், 10 ஆண்டுகளாக மனித - யானைகள் மோதலுக்கு வழிவகுப்பதாகவே உள்ளது. எனவே, யனைகள் வழித்தடங்களை பாதுகாக்க புதிய திட்டம், வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் வரைவு அறிக்கை, வனத்துறையின், www.forests.tn.gov.in/tn-forest-dept-publications என்ற இணையதளத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை, elephantcorridortnfd@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம் என, வனத்துறை அறிவித்துள்ளது.

