ADDED : மே 28, 2024 04:43 AM
சென்னை : பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வி துறையின் எமிஸ் தளத்தில் தனி அடையாள எண் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரும், அடுத்த வகுப்புக்கு முன்னேறும் போதும்; அடுத்த பள்ளிக்கு மாறும் போதும், எமிஸ் எண்ணின் தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அரசின் நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகளை பட்டியலிடவும், எமிஸ் எண் பயன்படுகிறது.
இந்நிலையில், பல தனியார் பள்ளிகள், மாணவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்லும் போதும், அடுத்த பள்ளிக்கு செல்லும் போதும், எமிஸ் எண் வழங்காமலும், அதை மற்ற பள்ளிக்கு பகிராமலும் விட்டு விடுவதாக, பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, மாநில திட்ட இயக்குனரகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, 'ஒவ்வொரு மாணவரின் எமிஸ் எண்ணை, அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், எமிஸ் எண்ணின் விபரங்களை, அனைத்து பள்ளிகளும் புதுப்பிக்க வேண்டும். இதில், பள்ளிகள் வெளிப்படையாக செயல்பட வேண்டும். எமிஸ் எண் தகவல்களில் ரகசியம் காக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.