இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி 2 இடங்களில் நாளை நடக்கிறது
இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி 2 இடங்களில் நாளை நடக்கிறது
ADDED : ஜூன் 21, 2024 01:03 AM

சென்னை:அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டில் சேர்வதற்கான ஆன்லைன் கவுன்சிலிங் ஜூலையில் நடக்கிறது.
கவுன்சிலிங்கில் விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து, விரிவான விளக்கம் அளிக்கும் வகையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து, சென்னையில் நாளை இரண்டு இடங்களில் நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கிலும்; பிற்பகல் 3:00 முதல் 6:00 மணி வரை, தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள டி.ஜி.பி. கல்யாண மண்டபத்திலும் நடக்கிறது.
தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின் செயலரும், பேராசிரியருமான புருஷோத்தமன் பங்கேற்று, இன்ஜினியரிங் நடைமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு விரிவான விளக்கம் தர உள்ளார்.
இன்ஜினியரிங்கில் வேலை வாய்ப்புகள் மிகுந்த பாடப்பிரிவுகள் குறித்து, கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின் ஆலோசனை வழங்க உள்ளார்.
இந்த ஆண்டு எந்த படிப்புக்கு மவுசு அதிகம்; எந்த பாடப்பிரிவுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது; முக்கிய இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி; சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி என்ற விரிவான விபரங்களை, இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

