ADDED : ஏப் 28, 2026 11:20 PM
பாகூர்:
புதுச்சேரி அருகே வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த இன்ஜினியரை, கடப்பாறையால் தாக்கி கொலை செய்த நபரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி, மணப்பட்டு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன், 35; இன்ஜினியர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், மன அழுத்தம் காரணமாக வேலையை விட்டு, சொந்த ஊருக்கு வந்து, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மணிகண்டன், பக்கத்தில் உள்ள தன் பாட்டி வீட்டில் துாங்கினார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு, அவரது தம்பி சேது ஓடி வந்து பார்த்த போது மணிகண்டன் தலையில் பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது, அங்கு, அவர் இறந்தார்.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்தில் விசாரித்தனர். அப்போது, மணிகண்டனை, அதே பகுதியை சேர்ந்த டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி வசந்தராஜா, 47, என்பவர் தான், கடப்பாறையால் தாக்கியது தெரிந்தது. வசந்தராஜாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், வசந்தராஜாவின் மனைவியுடன் மணிகண்டன் பேசி வந்ததால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், இரண்டு மாதங்களாக மனைவியை பிரிந்து, அவர் தனியாக வசித்து வந்தது தெரிந்தது.
தொடர்ந்து, கிருமாம்பாக்கம் போலீசார், வசந்தராஜாவிடம் விசாரணை நடத்துகின்றனர்.
