இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஜூலை 22ல் துவக்கம்: தரவரிசை பட்டியல் வெளியீடு
இன்ஜினியரிங் கவுன்சிலிங் ஜூலை 22ல் துவக்கம்: தரவரிசை பட்டியல் வெளியீடு
ADDED : ஜூலை 10, 2024 11:06 AM

சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங் தரவரிசை பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார். வரும் ஜூலை 22ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஜூனில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 2.29 லட்சம் பேர் விண்ணப்பித்து, 1.87 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். 1.55 லட்சம் பேர் சான்றிதழ்களை பதிவேற்றினர். இவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், 'கட் ஆப்' நிர்ணயிக்கப்பட்டு, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று(ஜூலை 10) தரவரிசை பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார். பட்டியல் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
நிருபர்கள் சந்திப்பில் வீரராகவராவ் கூறியதாவது: 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற 36,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் ஜூலை 22ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. ஜூலை 22ம் தேதி துவங்கி செப்.,11ம் தேதி வரை இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைபெறும்.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 29ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெறும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு ஜூலை 22ம் தேதி மற்றும் ஜூலை 23ம் தேதி கவுன்சிலிங் நடைபெற உள்ளது. துணைக் கவுன்சிலிங் செப்.,6ம் தேதி முதல் செப்.,8ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
முதல் 2 இடங்களை பிடித்த மாணவிகள்
* 200க்கு 200 கட்ஆப் எடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த தோஷிதா லட்சுமி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
* 2ம் இடத்தை திருநெல்வேலியை சேர்ந்த நிலஞ்சனா பிடித்துள்ளார்.
* நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் 3ம் இடத்தை பிடித்துள்ளார்.
* 7.5சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேலத்தை சேர்ந்த ராவணி 199.50 கட் ஆப் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.