'குட்கா' முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் ஆஜர்
'குட்கா' முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் ஆஜர்
ADDED : செப் 10, 2024 03:35 AM

சென்னை: 'குட்கா' முறைகேடு வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உட்பட, 20 பேர், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.
மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை தமிழகத்தில் விற்க அனுமதித்ததாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என, மொத்தம் 27 பேருக்கு எதிராக, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த விசாரணையின் போது, குற்றப்பத்திரிகை நகலை பெற, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோருக்கு, 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய்பாபா முன், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என, 20 பேர் நேரில் ஆஜராகினர்.
சி.பி.ஐ., தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் லெனின் ராஜா ஆஜராகி, ''குட்கா முறைகேடு வழக்கில் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
''குற்றப்பத்திரிகை நகல் அனைவருக்கும் வழங்கும் வகையில் தயாராக இல்லை,'' என்றார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை, வரும் 23க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
முன்னதாக, வழக்கில், 19வது நபராக குற்றம்சாட்டப்பட்ட முருகன் என்பவர், கடந்த ஜூனில் இறந்து விட்டதால், அவரின் இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல, இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் பெற்ற ஆறு பேரில், ஒருவர் நேரில் ஆஜராகவில்லை. அவர் மீதான வழக்கும், வரும் 23க்கு தள்ளிவைக்கப்பட்டது.