ரேஷன் எடையாளர் பணிக்கு போலி உத்தரவு: கூட்டுறவுத்துறை அமைச்சர் மாவட்டத்தில் சர்ச்சை
ரேஷன் எடையாளர் பணிக்கு போலி உத்தரவு: கூட்டுறவுத்துறை அமைச்சர் மாவட்டத்தில் சர்ச்சை
ADDED : ஜூலை 09, 2024 04:17 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, 849 ரேஷன் கடைகளில் காலியாக உள்ள, 103 விற்பனையாளர், 12 எடையாளர் பணிக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்டில் கூட்டுறவு இணை பதிவாளர் நேர்முகத் தேர்வு நடத்தினார்.
இப்பணிக்கு, 4,457 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேர்முக தேர்விற்குப் பின், தகுதியானவர்களுக்கு பணி நியமன உத்தரவை இணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வழங்கி, பணியில் அமர்ந்து விட்டனர்.
சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில், 12 எடையாளர் பணியிடத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே நியமிக்கப்பட்டு விட்டனர்.
இந்நிலையில், பிப்ரவரியில் கூட்டுறவு அதிகாரிகள் கையெழுத்திட்டு, சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலை ரேஷன் கடைகளில் எடையாளர் பணிக்கு இரு பெண், ஒரு ஆண் என, மூன்று பேருக்கு பணி நியமனத்திற்கான உத்தரவை வழங்கினர்.
மூவரும் வேலைக்கு சேர பண்டக சாலை மாவட்ட அலுவலகத்திற்கு சென்றனர். இந்த உத்தரவை அதிகாரிகள் பார்த்தபோது போலி என, தெரிந்தது. மூவரும் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
சிவகங்கை கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது: இந்த உத்தரவில் கையெழுத்திட்டது யார் என்பது குறித்து அறியவும், போலி உத்தரவு தயாரித்தவர்கள் குறித்து அறிய துணை பதிவாளர் - பொறுப்பு பாரதி, கூட்டுறவு சார் -- பதிவாளர் இருவர் உள்ளிட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் முழு விபரம் தெரியவரும். இவ்வாறு கூறினார்.