ஆரம்ப சுகாதார நிலையம் மூடல் பாம்பு கடித்த விவசாயி பலி
ஆரம்ப சுகாதார நிலையம் மூடல் பாம்பு கடித்த விவசாயி பலி
ADDED : ஜூலை 06, 2024 02:46 AM
சென்னை,:ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியிருந்ததால், பாம்பு கடிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்தவரின் குடும்பத்துக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புதுராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி; விவசாயி; வயலில் வேலை செய்தபோது, இவரை பாம்பு கடித்தது. உடனே, அருகில் உள்ள கண்ணன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அது பூட்டப்பட்டிருந்தது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதற்குள், முரளி இறந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் சம்பவம் நடந்தது.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், முரளியின் மனைவி அருணா தாக்கல்செய்த மனுவில், 'ஆரம்ப சுகாதார நிலையம், 24 மணி நேரமும் இயங்க வேண்டும். என் கணவரை சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, கண்ணன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்தது. அதனால் தான் அவர் இறந்தார். எனவே டாக்டர், ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்த உத்தரவு: ஆரம்ப சுகாதார நிலையம், 365 நாட்களும் திறந்திருக்க வேண்டும். இந்த வழக்கைபொறுத்தவரை, விதிகள் மீறப்பட்டுள்ளன. அரசு தன் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. மனுதாரருக்கு, 37 வயது; மேலும், 10, 12 வயதில், குழந்தைகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் கருதி, குறிப்பிட்ட அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
எனவே 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை, இரண்டு வாரங்களில், சுகாதாரத் துறை வழங்க வேண்டும். வாழ்வாதாரத்துக்காக, மனுதாரருக்கு வேலை வழங்க வேண்டும். அதிகாரிகளின் அலட்சியத்தால் தான், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருபோதும் மீண்டும் இதை மேற்கொள்ளக் கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.