அதிகாலையில் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம்; உழவர் சந்தை அலுவலர்களுக்கு உத்தரவு
அதிகாலையில் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம்; உழவர் சந்தை அலுவலர்களுக்கு உத்தரவு
ADDED : மார் 10, 2025 05:40 AM

சென்னை: 'உழவர் சந்தை அதிகாரிகள், அதிகாலையில் பணிக்கு வந்து காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்' என, வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
மாநிலம் முழுதும், 183 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் 2,000 டன்கள் அளவிற்கு காய்கறிகள் விற்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக, 8,000 விவசாயிகள், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் அடைகின்றனர்.
உழவர் சந்தைகளில், அதிகாலையில் விற்பனைக்கு வரும் காய்கறிகளுக்கு, சந்தை விலையை வேளாண்வணிகப்பிரிவு நிர்வாக அலுவலர்கள் நிர்ணயம் செய்ய வேண்டும்.
அனைத்து உழவர் சந்தைகளிலும், வியாபாரம் குறித்த விபரங்களை கண்காணிக்க, இரண்டு உதவி நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி நிர்வாக அலுவலர்கள், அதிகாலையில் பணிக்கு வருவதில்லை. இதனால், உழவர் சந்தைகளின் செயல்பாட்டில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
பணிக்கு வரும் அதிகாரிகள், 'ஜியோடேக்' புகைப்படம் எடுத்து பதிவு செய்து விட்டு, வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்த விபரம் புதிதாக பொறுப்பேற்றுள்ள வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி கவனத்திற்கு சென்றுள்ளது.
இதையடுத்து, உழவர் சந்தை அதிகாரிகள் அனைவருக்கும், மொபைல்போனில் நேரடியாக குறுஞ்செய்தி அனுப்பி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வேளாண் வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்ட வேளாண் வணிகப்பிரிவு இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் துவங்கி, 183 உழவர் சந்தை அதிகாரிகளுக்கும், தன் மொபைல் போனில் இருந்து நேரடியாக, வேளாண் துறை செயலர் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
அதில், 'உழவர் சந்தை அதிகாரிகள் அதிகாலையில் பணிக்கு வந்ததும், முதல் வேலையாக 'ஜியோடேக்' புகைப்படம் எடுத்து, தலைமை அலுவலகம் அனுப்ப வேண்டும்.
'சரியான நேரத்திற்கு சென்று, காய்கறிகளுக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அலுவலர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்ய வேண்டும். புகார்கள் எதுவும் வரக்கூடாது.
'உழவர் சந்தை அலுவலர்கள், தங்கள் கடமையை சரிவர செய்யவில்லை என்ற புகார் வந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், என, அவர் எச்சரித்துள்ளார். உழவர் சந்தை செயல்பாடுகளை, தினமும் கண்காணிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.