ADDED : ஏப் 14, 2024 06:17 AM
சென்னை : மேற்கு வங்க மாநிலம் புருலியா - விழுப்புரம் வாராந்திர விரைவு ரயில், நேற்று முதல் திருநெல்வேலி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது.
சென்னை பெரம்பூர் வழியாக இயக்குவதால், திருவண்ணாமலை செல்வோருக்கு வசதியாக இருக்கும்.
புருலியா - விழுப்புரம் இடையே திங்கள், வெள்ளிக்கிழமை என வாரம் இருமுறை இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் வரை இயக்கப்படுகிறது.
இந்த ரயிலை சென்னை வழியாக செல்லும் வகையில், வழித்தடம் மாற்றம் செய்து, திருநெல்வேலி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று பயணியர் கோரிக்கை விடுத்தனர்.
அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து என்ற அமைப்பால் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, தெற்கு ரயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்படி, புருலியா ---- விழுப்புரம் வாராந்திர விரைவு ரயில், நேற்று முதல் திருநெல்வேலி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. அதேபோல, சென்னை பெரம்பூர், அரக்கோணம் வழியாக இயக்கும் வகையில் வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, ரயில் பயணியர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்ல, இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சிறப்பு ரயில்கள்
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விசாகப்பட்டினத்தில் இருந்து வரும் 17, 24, மே 1, 8, 15, 22, 29 ஜூன் 5, 12, 19, 26, ஜூலை 3ம் தேதிகளில் காலை 8:20க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 12:55 மணிக்கு கொல்லம் செல்லும்
l கொல்லத்தில் இருந்து வரும் 18, 25, மே 2, 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27, ஜூலை 4ம் தேதிகளில் இரவு 7:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 11:20க்கு விசாகப்பட்டினம் செல்லும்.
இந்த ரயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
அதே போல ஈரோட்டில் இருந்து நாளை அதிகாலை 4:15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், மறுநாள் மாலை 4:45 மணிக்கு உத்னா செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

