சொத்து தகராறில் தந்தை கொலை கச்சிராயபாளையத்தில் மகன் கைது
சொத்து தகராறில் தந்தை கொலை கச்சிராயபாளையத்தில் மகன் கைது
ADDED : ஆக 02, 2024 01:08 AM

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அடுத்த மண்மலை மேற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் மாரிமுத்து, 53; இவரது மகன்கள் பாண்டிதுரை,28; விஜய்,25; பாண்டிதுரைக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
பாண்டிதுரை, தனது தந்தை மாரிமுத்துவிடம், தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பாண்டிதுரை, தந்தை மாரிமுத்துவை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த மாரிமுத்து, கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். உடன் மாரிமுத்துவின் உறவினர்கள் உடலை அடக்கம் செய்வதற்கான சடங்குகளை மேற்கொண்டனர்.
தகவலறிந்த கச்சிராயபாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தி, மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து பாண்டிதுரையை கைது செய்தனர்.