பெண் டி.எஸ்.பி., தாக்கப்பட்ட வழக்கு; தலைமறைவாக இருந்தவர் கைது
பெண் டி.எஸ்.பி., தாக்கப்பட்ட வழக்கு; தலைமறைவாக இருந்தவர் கைது
ADDED : செப் 07, 2024 02:03 AM

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரோடு மறியல் செய்ய முயன்றவர்களை தடுத்த பெண் டி.எஸ்.பி., தாக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முருகேசனை 28,போலீசார் கைது செய்தனர். அவர் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து கை முறிந்தது.
அருப்புக்கோட்டையில் 3 நாட்களுக்கு முன்பு, லோடு வேன் டிரைவர் காளிக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி., காயத்ரி தடுக்க முயன்றார். அப்போது போராட்டக்காரர்கள் சிலர் டி.எஸ்.பி., தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர்.
இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய நபரான ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் தலைமறைவாக இருந்தார்.
அருப்புக்கோட்டை அருகே தொப்புலாக்கரை காட்டு பகுதியில் முருகேசன் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து திருச்சுழி டி.எஸ்.பி., ஜெகநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை அங்கு சென்று தேடினர். போலீசாரை பார்த்ததும் முருகேசன் தப்பி ஓட முயன்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது கை முறிவு ஏற்பட்டது.
போலீசார் அவரை கைது செய்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.