பணியில் ஒழுங்கீன குற்றச்சாட்டு தீயணைப்பு அலுவலர் 'டிஸ்மிஸ்'
பணியில் ஒழுங்கீன குற்றச்சாட்டு தீயணைப்பு அலுவலர் 'டிஸ்மிஸ்'
ADDED : ஜூலை 30, 2024 11:23 PM

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலராக பிரபாகரன், 52, என்பவர் பணியாற்றி வந்தார். சட்டப்படி திருமணம் செய்யாத பெண்ணுக்கும், இவருக்கும் பிறந்த குழந்தையை பணி பதிவேட்டில் பதிவு செய்தது உட்பட பணியில் ஒழுங்கீனமாக இருந்தது தொடர்பாக புகார் எழுந்தது.
இதுதவிர, அவரது இரண்டாவது திருமணம் குறித்து, அவரது முதல் மனைவி, உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கோவை மண்டல இணை இயக்குனர் சரவணக்குமார் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார்.
பணி பதிவேட்டில் பதிவு செய்தது உள்ளிட்ட புகார்கள் உண்மை என தெரிய வந்தது. இதனால், பணியில் ஒழுங்கீனமாக இருந்த நிலைய அலுவலர் பிரபாகரனை, 'டிஸ்மிஸ்' செய்து இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, தீயணைப்பு நிலைய வட்டாரத்தினர் கூறியதாவது:
பிரபாகரனுக்கு, திருணமாகி, இரு மகன்கள் உள்ளனர். முதல் மனைவிக்கு தெரியாமல், இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து, இரு மகள்கள் உள்ளனர். இது விஷயம் குறித்து முதல் மனைவிக்கு தெரிய வந்து, அவர் புகார் அளித்தார்.
சட்டப்படி திருமணம் செய்யாத பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளின் பெயர்களை, முறைகேடாக பணி பதிவேட்டில் இடம் பெற்றது தெரிந்தது. தொடர்ந்து, வேறு பெண்களுடன் பழக்கத்தில் இருந்தது உள்ளிட்ட சில புகார்கள் எழுந்தன. இவை அனைத்தும் குறித்து விசாரித்து, தற்போது, அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

