மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இலங்கை கப்பல் போக்குவரத்து கூடாது மீனவர்கள் கோரிக்கை
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இலங்கை கப்பல் போக்குவரத்து கூடாது மீனவர்கள் கோரிக்கை
ADDED : ஆக 07, 2024 11:05 PM

ராமேஸ்வரம்:தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை இந்திய- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
ஜூன் முதல் தற்போது வரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், படகுகளை மூழ்கடிப்பதும் மீனவர்களை கொலை செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். 2023ல் நாகப்பட்டினம் முதல் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு துவக்கப்பட்டது. பின், நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் என்.தேவதாஸ் கூறியதாவது: நட்பு நாடாக உள்ள இலங்கைக்கு மத்திய அரசு புதிய ரயில் திட்டம், தமிழர்களுக்கு புதிய வீடு வழங்குதல், பல நுாறு கோடி ரூபாய்க்கு வர்த்தக தொடர்பு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொடுத்தாலும் இந்திய மக்களை இலங்கை அரசு எதிரிகளாகவே பார்க்கிறது.
கடந்த இரு மாதமாக தமிழக மீனவர்கள் கைது, கொலை, படகுகள் மூழ்கடிப்பதை எவ்வித தயக்கமும் இன்றி துணிந்து செய்கிறது. இதனை தடுக்காமல் மத்திய அரசு அலட்சியமாக இருப்பது வேதனைக்குரியது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மீண்டும் துவக்கப்பட உள்ள இந்திய-இலங்கை கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இலங்கையுடன் வர்த்தகம், துாதரக உறவை துண்டிக்க வேண்டும். மேலும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.