ADDED : செப் 06, 2024 02:49 AM
சென்னை:இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த, தமிழக மீனவர்கள் ஏழு பேர் தமிழகம் திரும்பினர்.
ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஏழு பேர், கடந்த மாதம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களை விடுவிக்கக்கோரி, முதல்வர் ஸ்டாலின், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். ஏழு மீனவர்களையும் சில தினங்களுக்கு முன், இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்திய துாதரக அதிகாரிகள் உதவியுடன், நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் சென்னை திரும்பினர். விமான நிலையம் வந்த மீனவர்களை, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.