ரூ.பல கோடி சொத்து மோசடி விவகாரம் தாய், மகள், மருமகன் உட்பட ஐவர் கைது
ரூ.பல கோடி சொத்து மோசடி விவகாரம் தாய், மகள், மருமகன் உட்பட ஐவர் கைது
ADDED : ஏப் 18, 2024 01:48 AM

கோவை:கோவை, பீளமேடு பி.எஸ்.ஜி., எஸ்டேட் காலனியைச் சேர்ந்தவர் சிவராஜ், 40, கல்லுாரி அறங்காவலர். அவரது நிலத்தை, 2014ம் ஆண்டு, விற்பனை செய்ததற்கு, 5 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்தது.
அப்போது, சேலத்தைச் சேர்ந்த அஸ்வின்குமார் என்பவர், தனக்கு வருமான வரித்துறை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறினார். அவரை தன் அலுவலகத்தில் வருமான வரித்துறை வேலைகளைக் கவனிக்கும் பணிக்கு சிவராஜ் அமர்த்தினார்.வசந்த், 32, மற்றும் சிவகுமார், 34, ஆகியோரை அஸ்வின்குமார் உதவிக்கு சேர்த்துக் கொண்டார்.
அப்போது, சிவராஜிடம் வருமான வரித்துறையால் கைது செய்யப்படாமல் இருக்க, அவரது நிலத்தை தன் பெயருக்கு மாற்றும்படி அஸ்வின்குமார் வற்புறுத்தி உள்ளார். அதன்படி, கோவில்பாளையம், பொள்ளாச்சி, உட்பட சில இடங்களில் உள்ள அவரது நிலத்தை அஸ்வின்குமாரின் பெயருக்கு மாற்றினார்.
மேலும், சிவராஜின் வங்கிக் கணக்கில் இருந்து, பல கோடி ரூபாயை அஸ்வின்குமார் தன் கணக்குக்கு மாற்றினார். அவ்வாறு மாற்றிய சொத்துகளை 300 கோடி ரூபாய்க்கு மேல் பிறருக்கு விற்றார்.
இது குறித்து அறிந்த சிவராஜ், போலீசில் புகார் அளித்தார். கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அஸ்வின்குமார், வசந்த், சிவகுமார் மற்றும், 10 பேர் மீது வழக்கு பதிந்து, சிவகுமார், வசந்த் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தொடர் விசாரணையில் அஸ்வின்குமாரின் மனைவி ஷீலா, 52, மகள் தீக்ஷா, 29, மருமகன் சக்தி சுந்தர், 34, ஆகியோரும் இதில் உடந்தையாக இருந்தது தெரிந்ததால், அவர்களையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், எட்டு பேரை தேடி வருகின்றனர்.

