ADDED : பிப் 27, 2025 11:36 PM
சென்னை:உளுந்துார்பேட்டை உட்பட, ஐந்து ரயில் நிலையங்களில், நடை மேம்பாலங்கள் அமைக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பயணியர் வருகை அதிகமாக இருக்கும், ரயில் நிலையங்களை தேர்வு செய்து, படிப்படியாக மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறோம்.
குறிப்பாக, ஆபத்தான முறையில், பயணியர் ரயில் பாதைகளை கடப்பதை தவிர்க்க, ரயில் நிலையங்களில், நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருச்சி ரயில் கோட்டத்திற்கு உட்பட்ட, உளுந்துார்பேட்டை, தாழநல்லுார், செந்துறை, கொள்ளிடம், ஆனந்ததாண்டவபுரம் ரயில் நிலையங்களில், தலா ஒரு நடைமேம்பாலம் அமைக்க, 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த பணிகளை செய்வதற்கு, தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்து வருகிறோம். ஒவ்வொரு நடை மேம்பாலமும், தலா ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது.
பணிகளை துவங்கிய ஆறு மாதங்களில், இந்த நடை மேம்பாலங்கள் அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.