அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை
அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை
ADDED : ஆக 27, 2024 01:29 AM

வால்பாறை: வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணியர் கவனமாக செல்ல வேண்டும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர்.
தற்போது, கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் பெய்து வரும் கனமழையால், நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணியர் குளிக்க, தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கடந்த வாரம், வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள மளுக்கப்பாறை ரோட்டில், திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில், கபாலி என்ற யானை அடிக்கடி வாகனங்களை வழிமறித்து வருகிறது. இது தவிர, 50க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை மளுக்கப்பாறை வழியாக, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில், யானைகள் அதிக அளவில் நடமாடுவதாலும், மழையினால் சேதமான ரோடு சீரமைக்கும் பணி நடப்பதாலும், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும்.
'குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், எச்சரிக்கையாக செல்ல வேண்டும்' என்றனர்.