மசினகுடியில் வனத்தீ: கட்டுப்படுத்த வன ஊழியர்கள் தீவிரமுயற்சி
மசினகுடியில் வனத்தீ: கட்டுப்படுத்த வன ஊழியர்கள் தீவிரமுயற்சி
ADDED : மே 01, 2024 09:08 PM

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில், கோடை மழை ஏமாற்றியுள்ளதால் வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நீலகிரி வனக்கோட்டம் பெந்தட்டி காட்டு பகுதியில், ஏற்பட்ட வனத்தீ, நேற்று முன்தினம், இரவு, முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வனச்சரகம், ஆணிக்கல் கோவில் அருகே, கல்ஸ்கொம்பை வனப்பகுதியில் பரவியது.
வனத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். வெப்பத்தின் தாக்கம், காற்றின் வேகம் காரணமாக தீயை கட்டுப்படுத்துவதில் வனத்துறை கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால், வனச்சரகர்கள் ஜான் பீட்டர், தயாநந்தன் மற்றும் வன ஊழியர்கள் எதிர் தீ மூலமும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக, இன்றும், ஈடுபட்டனர். பணிகளை மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், ஆய்வு செய்தார்.
வனத்துறையினர் கூறுகையில், 'வனத்தீ ஏற்பட்ட பகுதியில் நேரடியாகவும், எதிர் தீ மூலமும் வனத்தீயை கட்டுப்படுத்தும் பணியில். ஈடுபட்டனர். அதன் மூலம் வனத்தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் ஏற்பட்டுள்ள வனத்தீயை கண்காணித்து கட்டுப்படுததும் பணிகள் வன ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்' என, கூறினர்.