நிசப்தமான சூழலில் வரையாடுகள் பிரசவம்; குட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
நிசப்தமான சூழலில் வரையாடுகள் பிரசவம்; குட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
ADDED : மார் 02, 2025 02:58 AM

மூணாறு : கேரள மாநிலம் இரவிகுளம் தேசிய பூங்காவில் நிசப்தமான சூழலில் வரையாடுகள் குட்டிகளை ஈன்றெடுத்து வருகின்றன.
மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடு ஏராளமாக உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகளை கடும் கட்டுப்பாடுகளுடன்வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.
ஆண்டுதோறும் வரையாடுகளின் பிரசவ காலம் பிப்ரவரியில் துவங்கி மார்ச் இறுதி வரை நீடிக்கும். அப்போது இப்பூங்கா மூடப்பட்டு ராஜமலைக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்படும்.
அதன்படி பிப். 1ல் பூங்கா மூடப்பட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நிசப்தமான சூழலில் வரையாடுகள் குட்டிகளை ஈன்றெடுத்து வருகின்றன.
வாய்ப்பு :பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலை, குமரிக்கல்லு, ஆனமுடி, மேஸ்திரிகெட்டு, வரையாடுமலை உட்படபல பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் வரையாடு குட்டிகள் அதிகம் பிறந்துள்ளதாக வனத்துறையினரின் கண்காணிப்பில் தெரியவந்தது.
ராஜமலை பகுதியில் மட்டும் 30க்கும் மேற்பட்ட குட்டிகள் நடமாடுவதால், இந்தாண்டு குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.இரவிகுளம் தேசிய பூங்காவில் கடந்தாண்டு புதிதாக பிறந்த 144 குட்டிகள் உட்பட 827 வரையாடுகள் உள்ளதாக வனத்துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

