'தனியார் பங்களிப்பால் 10 ஆண்டில் விண்வெளி துறையில் நல்ல வளர்ச்சி!'
'தனியார் பங்களிப்பால் 10 ஆண்டில் விண்வெளி துறையில் நல்ல வளர்ச்சி!'
ADDED : ஆக 23, 2024 02:15 AM

சென்னை:''முந்தைய காலங்களில் விண்வெளியை சிலருக்கு மட்டுமே சொந்தமானதாகக் கருதினர். இன்று அப்படியில்லை. விண்வெளி துறையானது தனியார் பங்களிப்பால், 10 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது,'' என, கவர்னர் ரவி பேசினார்.
'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு, 'இந்தியாவின் இளம் விஞ்ஞானிகள்' என்ற போட்டியை நடத்துகிறது. இதில், தமிழகத்தில் 39 பேர் உட்பட நாடு முழுதும் 103 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை, கவர்னர் ரவி நேற்று பார்வையிட்டார்.
பின், அவர் பேசியதாவது:
என் பள்ளி பருவத்தில், மின் விளக்கு வசதி இல்லாத கிராமத்தில் தான் கல்வி கற்றேன். அப்போது, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மிகக்குறைவு. இன்று அந்த நிலை முற்றிலுமாக மாறி உள்ளது.
ஆசைப்பட்டேன்
மாணவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள பல வழிகள் உருவாகி உள்ளன. பூமியின் சுற்றுப்பாதையில், மனிதர்களால் செலுத்தப்பட்ட முதலாவது செயற்கைக்கோள் பற்றி, நான் தெரிந்துகொள்ள மிகவும் ஆசைப்பட்டேன்.
என் பள்ளி ஆசிரியர்களுக்கு அதுபற்றிய விபரம் முழுதுமாக தெரியவில்லை. இன்று அந்த நிலைமை முற்றிலுமாக மாறி இருக்கிறது.
எனக்கு பள்ளி பருவத்தில் இருந்தே, விண்வெளி பற்றி தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம். குறிப்பாக, என் கல்லுாரி காலத்தில், 'ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்' பாடம் தான் எனக்கு மிகவும் பிடித்தது.
இளம் விஞ்ஞானிகளை பார்க்கும் போது ஹோமி பாபா, விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் போன்றவர்கள் நினைவுக்கு வருகின்றனர்.
எனவே, இன்றைய இளம் தலைமுறையினர், உங்கள் கனவை மட்டுமே குறிவைத்து முன்னேறுங்கள். புதிய வளர்ச்சிகள் தோன்றுவதற்கு இளம் தலைமுறையின் பங்கு அவசியம். நம் எதிர்காலம் முழுதும் வாய்ப்புகளால் நிரம்பியுள்ளது.
தனியார் பங்களிப்பு
நாட்டுக்கு சொந்தமாக விண்வெளி நிலையம் தேவைப்படுகிறது. அதை உருவாக்கி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். முந்தைய காலங்களில் விண்வெளியை சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக கருதினர். இன்று அப்படியில்லை. விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பின் விளைவாக, 10 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகர் வினோத் கந்தாரே, 'சியமன்ஸ்' இயக்குனர் ராகுல் குல்கர்னி, சி.எஸ்.ஆர்., தலைவர் லோகபிராம், 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' தலைவர் ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

