100 சதவீத தேர்ச்சி தனியார் பள்ளிகளுக்கு அரசு பாராட்டு விழா
100 சதவீத தேர்ச்சி தனியார் பள்ளிகளுக்கு அரசு பாராட்டு விழா
ADDED : ஜூலை 11, 2024 11:17 PM
சென்னை:பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற, 3,949 தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு, அரசு சார்பில், ஆகஸ்ட் 4ல் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் தனியார் பள்ளிகள் பிரிவு இயக்குனர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 2,199 மெட்ரிகுலேஷன் பள்ளிகளும்; பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,750 மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 78 மாணவ, மாணவியர், சர்வதேச அளவிலும்; 255 பேர் தேசிய அளவிலும்; 1,579 பேர் மாநில அளவிலும் பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, 3,949 தனியார் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களையும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும் பாராட்டி ஊக்குவிக்க, தமிழக அரசு சார்பில் ஆகஸ்ட் 4ல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா நடத்தப்படுகிறது.
பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் முன்னிலையில் நடக்கும் விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி, பாராட்டு சான்றிதழ்களை வழங்க உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

