வெப்ப அலையால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் அரசு நிவாரணம்
வெப்ப அலையால் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் அரசு நிவாரணம்
ADDED : மார் 05, 2025 05:08 AM

சென்னை: ''வெப்ப அலை காரணமாக உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, நான்கு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்,'' என, அமைச்சர் கணேசன் கூறினார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தலைமையில், 54வது தேசிய பாதுகாப்பு தின விழா, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள செயின்ட் கோபெயின் நிறுவனத்தில் நேற்று நடந்தது.
இதில், அமைச்சர் கணேசன் பேசியதாவது: தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும். தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதி செய்வதன் வாயிலாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும். பணியிடங்களில் எதிர்பாராத அபாயங்களை தவிர்க்க, முறையான திட்டமிடல் அவசியம். தொழிலாளர்களின் உயிரை பாதுகாக்க, அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க, பல்வேறு முன்னெடுப்புகளை, அரசு செயல்படுத்தி வருகிறது. வெப்ப அலை காரணமாக உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, நான்கு லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆனந்த், செயின்ட் கோபெயின் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் வெங்கட் முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.