பாவம் இழைத்த காங்., - தி.மு.க., கவர்னர் ரவி கடுமையான குற்றச்சாட்டு
பாவம் இழைத்த காங்., - தி.மு.க., கவர்னர் ரவி கடுமையான குற்றச்சாட்டு
ADDED : மார் 03, 2025 08:30 AM

சென்னை : 'காங்கிரசும் தி.மு.க., வும் கச்சத்தீவு ஒப்பந்தம் வழியே நம் மீனவர்களுக்கு பெரும் பாவத்தை இழைத்தன' என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ராமேஸ்வரத்துக்கு சென்றபோது துன்பத்தில் உழலும் நம் மீனவ சமுதாயத்தை சேர்ந்த சகோதர, சகோதரிகளை சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். நம் வறிய நிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற அநியாயமான 1974ம் ஆண்டு ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நம் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பறித்ததன் வழியாக மத்தியிலும், தமிழகத்திலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள், பெரும் பாவத்தை இழைத்தன. அன்றில் இருந்து இன்றுவரை நம் மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது. இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்த நீடித்த பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்த பிரச்னையை அரசியலாக்கி மத்திய அரசை குறை கூறுவதற்கு பதிலாக ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு பெரிதும் உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக 1974ல் நடந்த தவறுக்கு சம பொறுப்பு அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.