குரூப் - 2 தேர்வு: 5.81 லட்சம் பேர் எழுதினர்: வினாக்கள் கடினமாக இருந்ததாக தகவல்
குரூப் - 2 தேர்வு: 5.81 லட்சம் பேர் எழுதினர்: வினாக்கள் கடினமாக இருந்ததாக தகவல்
ADDED : செப் 14, 2024 11:49 PM
சென்னை: தமிழகம் முழுதும், 2,327 அரசு பணியிடங்களை நிரப்ப, நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வை, 5.81 லட்சம் பேர் எழுதினர்.
ஒருங்கிணைந்த குரூப்- 2 பணிகளில் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நேற்று நடந்தது. தேர்வுக்கு, 7 லட்சத்து 93,966 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று, 2,763 மையங்களில், 5 லட்சத்து 81,305 பேர் தேர்வு எழுதினர். இது, விண்ணப்பித்தவர்களில், 73.22 சதவீதம்.
டி.என்.பி.எஸ்.சி., தலைவர் எஸ்.கே.பிரபாகர், சென்னை எழும்பூர் பிரசிடென்சி மேல்நிலை பள்ளி மையத்தில், தேர்வு நடப்பதை பார்வையிட்டார். அவர் அளித்த பேட்டி:
துணை வணிக வரித்துறை அதிகாரி, சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர், வருவாய்துறை உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, 2,327 பேரை தேர்வு செய்ய தேர்வு நடந்துள்ளது. இதில், தேர்ச்சி பெறுவோர், முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு, 10 தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு, எட்டு தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மீதமுள்ள இரண்டு தேர்வுகளும் நடத்தப்படும்.
இந்த ஆண்டு இதுவரை, 10,315 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10,872 பேருக்கு வேலை கிடைக்கும். டி.என்.பி.எஸ்.சி., குரூப் -2 தேர்வுக்கான விடைத்தாள், ஆறு வேலை நாட்களில் வெளியிடப்படும். தேர்வர்கள் மாற்று கருத்து இருந்தால் இணையதளத்தில் தெரிவிக்கலாம்.
அதை வல்லுனர் குழு ஆய்வு செய்து, இறுதி முடிவு வெளியிடப்பட்டு தேர்வுத்தாள் திருத்தும் பணி துவக்கப்படும். இரண்டு, மூன்று மாதங்களுக்குள் முடிவுகள் வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். குரூப் - 4 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு, எஸ்.கே.பிரபாகர் கூறினார்.