ADDED : மார் 10, 2025 05:43 AM

சென்னை: 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
பூமத்திய ரேகையை ஒட்டிய, வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாக பதிவாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கரூர் பரமத்தியில் நேற்று 101 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.