ADDED : ஆக 17, 2024 12:29 AM
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைகண்ணன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
இன்று கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை; நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தேனி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கொடைக்கானல் படகு குழாமில் 6 செ.மீ., மழை; மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 5 செ.மீ., மழையும் பதிவானது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மழைக்கு 7 பேர் பலி
தமிழகத்தில் இம்மாதத்தில் நேற்று வரை, மழைக்கு இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் இறந்துள்ளனர். இவர்களில் ஐந்து பேர் மின்னல் தாக்கியும், ஒருவர் மரம் விழுந்தும், ஒருவர் சுவர் இடிந்தும் இறந்துள்ளனர்.
மழையில், 13,500 கோழிகள், 71 கால்நடைகளும் இறந்துள்ளன. மேலும், 217 குடிசைகள், 85 வீடுகள் பகுதியாகவும், 16 குடிசைகள், ஆறு வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளன.

