ADDED : ஆக 06, 2024 11:16 PM
சென்னை:வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 9 மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது, வரும் 12 வரை நீடிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த, 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மாவட்ட கடலோரப் பகுதிகளில், வரும் 8ம் தேதி வரை மணிக்கு, 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புளளது. இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.