டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்
டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்
ADDED : பிப் 27, 2025 11:48 AM

சென்னை : டெல்டா மாவட்டங்களில் மார்ச் 1ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 26ம் தேதி முதல் மார்ச் 04ம் தேதி வரை லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், 'கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

