டயாலிசிஸ் பணியாளர்களை நியமிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
டயாலிசிஸ் பணியாளர்களை நியமிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : மார் 04, 2025 08:58 PM
மதுரை : அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை ஆனந்த்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு:
சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் இயந்திரம் மூலம் 'டயாலிசிஸ்'(ரத்தம் சுத்திகரிப்பு) செய்யப்படுகிறது. தற்காலிக மற்றும் பயிற்சி மாணவர்கள் மூலம் டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
மருத்துவக் கல்வி இயக்குனரகம் டயாலிசிஸ் தொழில்நுட்ப பணியிடங்களில் 624 பேரை நிரந்தரமாக நியமிக்க சுகாதாரத்துறைக்கு 2023 ல் பரிந்துரைத்தது. டயாலிசிஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நிரந்தர தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. நீதிமன்றம் தலையிட முடியாது. முடிவெடுக்குமாறு அரசை கட்டாயப்படுத்த முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.