கோவில் நிதியில் திருமண மண்டபம் அமைப்பதற்கு எதிராக வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கோவில் நிதியில் திருமண மண்டபம் அமைப்பதற்கு எதிராக வழக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : மார் 06, 2025 12:28 AM

மதுரை: தமிழகத்தில் ஐந்து கோவில்களுக்கு கோவில் நிதி மூலம் திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைக்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலான வாகீஸ்வரர் கோவில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், 22 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் திருமண மண்டபங்கள் அமைக்க தமிழக அறநிலையத்துறை 2023 மார்ச் 3ல் அரசாணை வெளியிட்டது.
இப்பணியை அந்தந்த கோவில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் அமைக்கப்படுகிறது. மாநகராட்சியிடம் கட்டட அனுமதி பெறவில்லை. அறநிலையத்துறை சட்டப்படி கோவில் நிதியை நலிவடைந்த கோவில்களில் அறப்பணி மேற்கொள்ள பயன்படுத்தலாம்.
ஹிந்து மதத்தை பரப்ப மற்றும் கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகள் துவக்க கோவில் நிதியை பயன்படுத்தலாம். இதற்கு முரணாக திருமண மண்டபம் அமைக்க பயன்படுத்துவது விதிமீறலாகும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு அறநிலையத்துறை செயலர், கமிஷனர், காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஏப்., 2க்கு ஒத்திவைத்தது.