நீதிமன்ற அவமதிப்பு வழக்குகல்வி அதிகாரிக்கு சிறை தண்டனை நிறுத்தம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகல்வி அதிகாரிக்கு சிறை தண்டனை நிறுத்தம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 27, 2025 09:09 AM

மதுரை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தவருக்கு சிறை தண்டனை விதித்த உத்தரவை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
நாங்குனேரி அருகே காமனேரி ஹெலின் ரோனிகா ஜேசுபெல் தாக்கல் செய்த மனு:திசையன்விளையிலுள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக 2019 ஜூன் 4ல் நியமிக்கப்பட்டேன்.
இதற்கு ஒப்புதல் மற்றும் அதற்குரிய பணப்பலன்களை வழங்க திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். அதை அனுமதித்த தனி நீதிபதி,'மனுதாரரின் பணி நியமன தேதியிலிருந்து ஒப்புதல் அளித்து அதற்குரிய பணப்பலன்களை வழங்க வேண்டும்,' என 2023 ல் உத்தரவிட்டார்.
இதை நிறைவேற்றாததால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த சின்னராசு மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
பிப்.19 ல் நீதிபதி எல்.விக்டோரியா கவுரி: 2019 லிருந்து ஒப்புதல் அளிக்க உத்தரவிட்டதை நிறைவேற்றவில்லை.
மாறாக 2024 ஆக.1 முதல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல. சின்னராசுவிற்கு ஒருவாரம் சாதாரண சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.
நேற்று அதே நீதிபதி முன் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி முறையிட்டதாவது: ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு பிப்.19 ல் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தண்டனை விதித்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். தண்டனை விதித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். தண்டனை விதித்த உத்தரவை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.