ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு ஏப்., 1 முதல் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவு
ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்களுக்கு கட்டுப்பாடு ஏப்., 1 முதல் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 14, 2025 02:48 AM
சென்னை:ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த கட்டுப்பாடு ஜூன் வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி.,, பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
ஆய்வு நிறைவு பெற தாமதமாகும் என்பதால், வரும் கோடை விடுமுறையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வாகனங்களை அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி சிறப்பு அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், வனத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகினர்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இயற்கை, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தவும், நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் நுழையும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
நீலகிரியில், 5620 வணிக அறைகள், 575 உரிமம் பெற்ற, 'ஹோம்ஸ்டே' மட்டுமே உள்ளன. அவற்றில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 23,000 நபர்களை தங்க வைக்க முடியும். எனவே வார நாட்களில் 6000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களும் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.
கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
ஊட்டி, கொடைக்கானல் பகுதிக்குள் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது தொடர்பான ஆய்வு முடியும் வரை வரும் கோடைக்காலத்தில் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும், இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
உள்ளூர் வாகனங்கள், அரசு பணிக்காக செல்லும் வாகனங்கள், விவசாய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு, இந்த கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொது, தனியார், சுய உதவிக்குழு கூட்டுறவு சங்கங்களை ஒருங்கிணைத்து, சுற்றுலா பயணியர் வசதிக்காக, மின்சாரத்தால் இயங்கும் திறந்தவெளி பஸ், கண்ணாடி பஸ்களை வாங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். அரசு பஸ்கள், ரயில்கள் வாயிலாக வரும் பயணியருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஏப்., 1 முதல் ஜூன் வரை, இந்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.
ஊட்டி, கொடைக்கானலில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், மின் வாகனங்களுக்கான, 'சார்ஜிங் பாயின்ட்'களை அமைக்க வேண்டும். சுற்றுலா பயணியருக்கு வசதியாக, மாவட்ட நிர்வாகங்கள் பொது கழிப்பறைகளை அதிகரிக்க வேண்டும். பொது இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதை தடுக்கும் வகையில், பிளாஸ்டிக் எதிர்ப்பு குறித்து பிரசாரத்தை அதிகரிக்க வேண்டும்.
இந்த வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்தவும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் கூடுதல் காவல் துறையினரை பணியில் அமர்த்த தேவையான நடவடிக்கையை, டி.ஜி.பி., எடுக்க வேண்டும். ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் மின்சார வாகனங்களுக்கு, இ- - பாஸ் வழங்கும் நடைமுறையில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இதை அமல்படுத்தியது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை, ஏப்., 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.