sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு: அதானி குழுமம், 'செபி' தலைவர் மறுப்பு

/

ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு: அதானி குழுமம், 'செபி' தலைவர் மறுப்பு

ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு: அதானி குழுமம், 'செபி' தலைவர் மறுப்பு

ஹிண்டன்பர்க் பரபரப்பு குற்றச்சாட்டு: அதானி குழுமம், 'செபி' தலைவர் மறுப்பு


ADDED : ஆக 12, 2024 04:15 AM

Google News

ADDED : ஆக 12, 2024 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை : அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், 'செபி'யின் தலைவர் மதாபி புரி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருந்ததாக 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் குற்றச்சாட்டை தெரிவித்திருந்த நிலையில், 'இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உள்நோக்கம் உடையவை' என, செபி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், உலகின் பெரிய வர்த்தக நிறுவனங்களில் நடக்கும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

நிதி முறைகேடு


அந்த வகையில், நம் நாட்டின் முன்னணி வர்த்தக நிறுவனமான அதானி குழுமம், பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, தங்கள் நிறுவன பங்குகளை போலியாக அதிகரிக்கச் செய்வதாக, கடந்த ஆண்டு ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, அதானி நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. பல நுாறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, செபி எனப்படும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பை விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய செபி, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், 'அதானி குழுமம் எந்த முறைகேடும் செய்யவில்லை' என, குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என, உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச்சில் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு புயலை கிளப்பியது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், செபியின் தலைவர் மதாபி புரி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தது.

மேலும், 'செபி தலைவர் தன் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவே அதானி குழுமம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது.

ஹிண்டன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை; உள்நோக்கம் கொண்டவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என, செபி தலைவர் மதாபியும், அவரது கணவரும் மறுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கை:

எங்கள் வாழ்க்கை மற்றும் நிதி பரிமாற்றங்கள் எப்போதுமே திறந்த புத்தமாக இருந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தேவையான அனைத்து தகவல்களையும் செபியிடம் அளித்துள்ளோம்.

விரிவான அறிக்கை


நாங்கள் தனி நபர்களாக இருந்தபோது இருந்த ஆவணங்கள் உட்பட மேலும் தேவைப்படும் நிதி ஆவணங்களை வெளியிட எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இவ்விவகாரத்தின் வெளிப்படைத்தன்மைக்காக விரைவில் விரிவான அறிக்கை வெளியிடப்படும்.

செபி அமைப்பு, ஹிண்டன்பர்க்குக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுத்ததுடன், கடந்த ஜூன் மாதம் நோட்டீசும் அனுப்பியது. இதற்கு எதிராக, செபியின் பெயருக்கு களங்கம் விளைவிக்க ஹிண்டன்பர்க் முயன்றுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து அதானி குழுமமும் தன் மறுப்பை பதிவு செய்துள்ளது.

அதன் விபரம்:

அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுஉள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை. இந்திய சட்டங்களை அவமதிக்கும் ஒரு நிறுவனத்தால் சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டுகள். இதை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.

இந்த குற்றச்சாட்டுகளை 2024 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எங்கள் வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படை தன்மை உடையவை. அது குறித்த அனைத்து தகவல்களும் பொது ஆவணங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்நிறுவனம் தெரிவித்து இருப்பதை போல எந்த தனி நபர்களுடனும் எங்கள் நிறுவனத்துக்கு வர்த்தக தொடர்பு கிடையாது. இது வேண்டுமென்றே எங்கள் மீது பரப்பப்பட்டுள்ள அவதுாறு. சட்டம் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கி நடக்க நாங்கள் எப்போதும் உறுதி கொண்டுள்ளோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:



அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்கப்பட்டுள்ளன. இதன் மீது நடத்தப்பட்ட பல கட்ட விசாரணைகளில் 26வது கட்ட விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. மேலும், செபி தலைவர் புச் மற்றும் அவரது கணவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது செபியின் நம்பகத்தன்மையை குலைக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு சதி!

பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது:செபி அமைப்பின் மீது உறுதியாக ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டுகிறது. இதற்கு பின்னால் காங்கிரஸ் இருக்கிறது.உலகின் வலிமையான நிதி அமைப்புகளில் ஒன்றை சீர்குலைத்து மதிப்பிழக்கச் செய்வது மற்றும் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் குழப்பத்தை உருவாக்குவதே இதன் பின்னால் இருக்கும் நோக்கம். செபி மீது குற்றம் சுமத்தி, பங்கு சந்தையில் குழப்பம் விளைவித்து வளர்ச்சியை தடுப்பதே வெளிநாட்டு சக்திகளின் நோக்கமாக உள்ளது. இதை அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.



ஹிண்டன்பர்க் வைக்கும் குற்றச்சாட்டுகள்:

* செபி தலைவரான மதாபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் கவுதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி மோசடி செய்வதற்காக பயன்படுத்திய பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டின் நிறுவன பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். * அந்த நிறுவனங்களுக்கு சரிவு ஏற்பட்டால், தங்களுக்கும் பெரும் அளவில் நிதியிழப்பு ஏற்படும் என்பதால், அதானி குழுமத்தின் மீதான நடவடிக்கையை செபி தவிர்க்கிறது.
* மதாபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர், 2015 ஜூன் 5ம் தேதியன்று சிங்கப்பூரில், ஐ.பி.இ., பிளஸ் பண்டு 1ல் தங்கள் கணக்கை துவங்கியுள்ளனர். எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இதன் நிகர மதிப்பு, 83 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* இந்த கணக்கில் செய்யப்பட்ட முதலீடுக்கான ஆதாரமாக, அவர்கள் சம்பளம் பெற்ற பணத்தை குறிப்பிட்டு உள்ளனர். இதே பங்குகளில் அதானி குழுமமும் முதலீடு செய்துள்ளது.
* கடந்த 2017 ஏப்ரலில் செபியின் முழு நேர உறுப்பினராக மதாபி புச் புரி நியமிக்கப்பட்டார். • அதற்கு சில வாரங்களுக்கு முன், அதாவது 2017 மார்ச் 22ல், மொரீஷியசில் உள்ள நிதி நிர்வாக நிறுவனமான 'டிரைடென்ட் டிரஸ்ட்'க்கு தவல் புச் கடிதம் எழுதி, தங்கள் இருவரது பெயரில் இருந்த ஜாயின்ட் அக்கவுன்ட்டை தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு மாற்றியுள்ளார்.
• இதன் அடிப்படையில், 2018ம் ஆண்டு வெளியிட்ட கணக்கு விபரத்தில், தம்பதியரின் கணக்கில் இருக்கும் பங்கின் மதிப்பு 7.25 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.* இந்நிலையில், 2018 பிப்ரவரி 25ம் தேதி தங்களின் பங்குகளை விற்பனை செய்யும்படி நிறுவனத்துக்கு, மதாபியின் கணவர் தவல் கடிதம் எழுதி உள்ளார்.



பார்லி கூட்டுக்குழு விசாரணை !

காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:அதானி குழுமத்தின் மெகா ஊழல் குறித்து விசாரிக்க செபி காட்டி வரும் தயக்கம் நீண்ட நாட்களாகவே உறுத்தலாக உள்ளது. உச்ச நீதிமன்ற நிபுணர் குழுவும் இதை குறிப்பிட்டுள்ளது. செபியின் விசாரணை 2018ல் நீர்த்துப்போனது. ஆனால், 2023ல் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, விசாரணையை தீவிரப்படுத்தும் நிலை செபிக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து சந்தேகத்துக்குரிய 13 பண பரிவர்த்தனைகளை விசாரித்து வருவதாக, நிபுணர் குழுவிடம் செபி தெரிவித்தது. ஆனால் இதுவரை முடிவு தெரியவில்லை.
அதானி குழுமம் மீதான செபி விசாரணையில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செபி அமைப்பில் தலைமை வகிக்கும் அதிகாரி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பார்லி., கூட்டுக்குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



தெளிவான சதித்திட்டம்!


ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி கூறியதாவது:அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்திய ஹிண்டன்பர்க் நிறுவனம் குறித்து நம் நாட்டின் புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. அந்த நிறுவனம் சொல்லும் பொய் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் கையில் எடுக்கின்றனர். இதில் இருந்தே இதன் பின்னணியில் இருக்கும் சதித்திட்டம் தெளிவாக தெரிகிறது.
நம் நாட்டின் நிதித்துறையில் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அதன் ஸ்திரத்தன்மையை ஆட்டம் காண செய்வதே அவர்களின் நோக்கம்.இது போன்ற குற்றச்சாட்டுகள் பார்லி., கூட்டத்தொடரின் போது வெளியாவதையும் நாம் கவனிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதாவது:செபி தலைவர் மதாபி புரி புச், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார். அவர் ஏன் இன்னும, ராஜினாமா செய்யவில்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீட்டாளர்கள் இழந்தால், அதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடியா... செபி தலைவரா... அல்லது கவுதம் அதானியா? மிகக் கடுமையாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா?இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us