கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் ஹாலோ பிளாக் தயாரிப்பாளர்கள் 'ஸ்டிரைக்'
கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் ஹாலோ பிளாக் தயாரிப்பாளர்கள் 'ஸ்டிரைக்'
ADDED : மார் 05, 2025 04:33 AM

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லி, எம் -சாண்ட், பி -சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக, ஹாலோ பிளாக் எனப்படும் சிமென்ட் கற்கள் தயாரிப்பாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் எம் -சாண்ட், பி -சாண்ட், ஜல்லி ஆகியவற்றுக்கான விலையை அண்மையில் இரு மடங்காக உயர்த்தி உள்ளனர்.
வலியுறுத்தல்
திடீர் விலை உயர்வால், கட்டுமானம் மற்றும் சாலைப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
விலையை குறைக்க வலியுறுத்தி, கட்டட பொறியாளர்கள், ஹாலோ பிளாக் தயாரிப்பாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலெக்டரிடம் தனித்தனியே கோரிக்கை மனு அளித்தனர். எனினும், விலை குறைக்கப்படவில்லை.
இதையடுத்து, கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தி, மாவட்டம் முழுதும் ஹாலோ பிளாக் தயாரிப்பாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று துவக்கினர்.
இதனால், 300-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் தொழிற்கூடங்கள் செயல்படவில்லை; 3,000 தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் ஸ்ரீதர் கூறியதாவது:
மாவட்டத்தில் கட்டுமான தொழில்களை நம்பியே நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர்.
மணலுக்கு தட்டுப்பாடு உள்ளதை பயன்படுத்தி, கல் குவாரி உரிமையாளர்கள் ஒன்றுகூடி, அரசு ஆலோசனையின்றி, தன்னிச்சையாக ஜல்லி, எம்- சாண்ட், பி -சாண்டுக்கான விலையை இரு மடங்காக உயர்த்தி உள்ளனர். கனிம வளத்துக்கு தன்னிச்சையாக தனியாரே விலை நிர்ணயம் செய்யும் போக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.
நெருக்கடி
இதனால், மாவட்டம் முழுதும் கட்டுமான பணி பாதிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வரும் பொறியாளர்கள் வேலையை நிறுத்தி வைத்துள்ளனர்.
விவசாய பணிக்கு மாற்றாக உள்ள கட்டுமான பணியும் நடைபெறாததால் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.