ADDED : ஜூலை 11, 2024 10:06 PM

சென்னை:சென்னை எழும்பூரில் உள்ள அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மாவீரன் அழகு முத்துக்கோனுக்கு, மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது. இவரின் வாழ்க்கை சரித்திரம் பாடநுாலில் இடம்பெற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில், பல பேய்கள் உள்ளன; இந்த வேதாளம் வந்ததே, பேய்களை ஓட்ட தான். ஒவ்வொரு பேயாக ஓட்டி வருகிறேன். ஒரே நேரத்தில் அனைத்து பேய்களையும் ஓட்ட முடியாது. கடந்த, 70 ஆண்டுகளாக தமிழக மக்களை பிடித்த பீடைகளாக பல பேய்கள் உள்ளன.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகையை, நான் முன்னாள் ரவுடி என்று சொன்னது பொய் இல்லை; அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். என்னை தொடர்பு கொள்ளும் பாரம்பரிய காங்கிரஸ் நிர்வாகிகள், நான் தெரிவித்த கருத்தை வரவேற்றுள்ளனர்.
காவல் துறையினர், தங்களின் வீரத்தை கூலிப்படைகள் மீது காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தி.நகர் கமலாலயத்தில் அண்ணாமலை முன்னிலையில், ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் தமிழ்நெஞ்சம் தலைமையில், 50க்கும் மேற்பட்ட அக்கட்சியினர், பா.ஜ.,வில் இணைந்தனர்.

