ADDED : மார் 01, 2025 01:53 AM
சென்னை: வளசரவாக்கம் காவல் நிலையத்தில், விசாரணைக்கு பின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி :
புதிய கேள்விகள் ஏதுமில்லை. அதற்குரிய விளக்கம் அளித்துள்ளேன். தேவைப்படும் பட்சத்தில், அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்துழைப்பேன். மூன்று மாதம் அவகாசம் இருக்கும் நிலையில், மூன்றே நாளில் விசாரிக்க அவசரம் காட்டுவது ஏன்?
என்னை அசிங்கப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் தான். அவசியமில்லாமல், சம்மன் ஒட்டினர். அதை படித்து விட்டு கிழித்தோம். அவர் காவலாளி கிடையாது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.
என் மீதான நட்பின் மீது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அரசின் அழுத்தத்தால் போலீசார் இப்படி நடந்து கொள்கின்றனர். என்னை கருணாநிதி, சிறையில் போட்டு தலைவராக்கினார். அவர் மகன் என்னை முதல்வர் ஆக்க போகிறார்.
காவல் நிலையத்திற்கு தாமதமாக வர காரணம் போலீசார் தான். நடிகையை திருமணம் செய்வதாக எந்த உறுதியும் தர வில்லை. என்னுடன் விரும்பியே அவர் உறவு வைத்துக் கொண்டார்.
கஷ்டத்தில் இருந்தவர், 60 லட்சம் ரூபாய் எப்படி கொடுக்க முடியும்? முதல் புகாரில், ஏழு முறை கருக்கலைப்பு போன்ற குற்றசாட்டு கிடையாது. இது காதல் அல்ல; கன்றாவி. 15 ஆண்டுகளாக, என்னை அசிங்கப்படுத்தி வருகிறார் யாரும் அதை கேட்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.