'இசை மும்மூர்த்திகளே மேலானவர்கள்' இளையராஜா வழக்கில் ஐகோர்ட் கருத்து
'இசை மும்மூர்த்திகளே மேலானவர்கள்' இளையராஜா வழக்கில் ஐகோர்ட் கருத்து
ADDED : ஏப் 18, 2024 11:30 PM
சென்னை:இசையமைத்த பாடல்களுக்கான பதிப்புரிமை தனக்கு உள்ளது என்பதால், 4,500க்கும் மேற்பட்ட தன் பாடல்களை பயன்படுத்த, 'எக்கோ ரிகார்டிங்' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்த, ரிகார்டிங் நிறுவனங்களுக்கு தடை விதித்திருந்தது.
தடையை நீக்கக்கோரி, எக்கோ ரிகார்டிங் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு உரிமை இருப்பதாக மனுக்களில் கூறப்பட்டன.
இந்த மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளன.
கடந்த முறை, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 'இளையராஜா எல்லாரையும் விட தான் மட்டுமே மேலானவர்' என்று நினைப்பதாக தெரிவித்தார்.
இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், 'இளையராஜா எல்லாருக்கும் மேலானவர் தான். இசையுலகில், அவர் கடவுளுக்கு அடுத்தபடியாக பார்க்கப்படுகிறார்' என்றார்.
இந்த வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'கடந்த முறை இளையராஜா தரப்பில், இசையுலகில் அவர் எல்லாருக்கும் மேலானவர் என்று கூறப்பட்டது.
'எங்களை பொறுத்தமட்டில், இசையுலகில் மும்மூர்த்திகளான முத்துச்சாமி தீட்சிதர், தியாகராஜர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவர் மட்டுமே அனைவருக்கும் மேலானவர்கள். இவர்கள் மட்டுமே தங்களை அனைவருக்கும் மேலானவர்கள் என்று கூறிக் கொள்ள முடியும். அவர்களை போல தன்னையும் இளையராஜா கூற முடியாது' என்றனர்.
அதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பதிப்புரிமை விவகாரத்தில், தன் உரிமை தான் மேலானது, என்ற வகையில் தான் கருத்து தெரிவிக்கப்பட்டது. மற்றபடி இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர், பண்பானவர். சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்' என்றார்.
இதையடுத்து தொடர்ந்து வாதங்களை முன்வைக்க, வரும் 24க்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

