வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் ஆடினால் இனி உரிமையாளரே பொறுப்பு
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் ஆடினால் இனி உரிமையாளரே பொறுப்பு
ADDED : ஆக 29, 2024 04:54 AM

சென்னை: 'வீட்டுவசதி வாரிய திட்ட பகுதிகளில், பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை, மறுமேம்பாடு செய்வதற்காக புதிய கொள்கை வெளியிடப்படும்' என்ற அறிவிப்பை, அரசின் வீட்டு வசதி வாரியம் கைவிட்டுள்ளது.
தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டங்களில், குலுக்கல் முறையில், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. வீடு ஒதுக்கீடு பெற்று, முழு தவணையையும் செலுத்தியவர்களுக்கு, அவர்கள் பெயரில் விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்புகள் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, வீட்டுவசதி வாரியத்தின் ஒத்துழைப்பை, வீட்டு உரிமையாளர்கள் கோரினர். அதை ஏற்று, உரிமையாளர்கள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது.
இதற்காக, சென்னை, கோவையில், 60 குடியிருப்பு வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டன. இத்திட்டத்தை செயல்படுத்த, 'பழைய குடியிருப்பு மறுமேம்பாட்டுக்கு புதிய கொள்கை வெளியிடப்படும்' என, 2022 - 23நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுஉள்ளது.
இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீட்டுவசதி வாரிய பழைய குடியிருப்பு மறுமேம்பாட்டு பணிகளை, உரிமையாளர்கள், ஒப்பந்த நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளலாம். இதில், வாரியம் பங்கேற்க, புதிய கொள்கை எதுவும் தற்போது தேவையில்லை என்று முடிவு செய்துள்ளோம்.
எனவே, புதிய கொள்கை தொடர்பான அரசின் அறிவிப்பை ரத்து செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்கள், பாதுகாப்பு சட்டத்தில் உள்ள வழிமுறைகள் அடிப்படையில் செயல்பட்டால் போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.