ஹிந்தி திணிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது: புதிய சட்டங்கள் குறித்து இ.பி.எஸ்., விமர்சனம்
ஹிந்தி திணிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது: புதிய சட்டங்கள் குறித்து இ.பி.எஸ்., விமர்சனம்
ADDED : ஜூலை 01, 2024 05:14 PM

சென்னை: 'அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை ஹிந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில், இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது. முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் கண்டனத்திற்குரியது.
ஹிந்தி திணிப்பு
அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை ஹிந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான ஹிந்தி திணிப்பு. ஹிந்தி திணிப்பானது பல மொழிகள், பல கலாசாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது.
இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த ஹிந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.