ADDED : ஜூலை 11, 2024 01:45 AM
சென்னை:தமிழக பகுதிகளில் மழை குறைந்ததால், எட்டு இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவானது.
தமிழகம், புதுச்சேரியில், கடந்த ஒரு வாரமாக தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் குறைந்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், கூடலுார், 2; நடுவட்டம், 1 செ.மீ., மழை பெய்துள்ளது. அதேநேரம், மாநிலம் முழுதும் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலைய பகுதியில், 40 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை நகரம், வேலுார், 39; நாகை, பாளையங்கோட்டை, திருச்சி, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. அதாவது, எட்டு இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி, வெப்நிலை பதிவானது.
இந்நிலையில், வரும் 16ம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பில்லை; பெரும்பாலான பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை, இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

